Published : 27 Feb 2023 07:04 PM
Last Updated : 27 Feb 2023 07:04 PM

கால்பந்தாட்ட மைதானத்தில் ‘டெடிபியர்’ மழை... இது துருக்கி நெகிழ்ச்சி!

ரசிகர்கள் அளித்த டெடிபியர்களை எடுக்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள்

இஸ்தான்புல்: துருக்கியின் பெசிக்டாஸ் நகரில் நடந்த கால்பந்தாட்ட போட்டியின்போது பூகம்ப பாதிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டெடிபியர்களை பார்வையாளர்கள் மைதானத்தில் தூக்கி எறிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சிரியா - துருக்கி எல்லையில் மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவான அந்த பூகம்பம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியா - துருக்கி நாடுகளுக்கு உலக நாடுகள் நிவாரண மற்றும் மீட்பு பணி உதவிகளை செய்தன. பூகம்ப பாதிப்பிலிருந்து இரு நாடுகளும் மெல்ல மீண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான் துருக்கியின் பெசிக்டாஸ் நகரில் உணர்வுபூர்வமனான சம்பவம் நடந்துள்ளது. துருக்கியில் உள்ளூர் கால்பந்து கிளப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பெசிக்டாக்ஸில் நேற்று நடந்த போட்டியில் பெசிக்டாக்ஸ் - ஆண்டலியாஸ்போர் அணிகள் மோதின.

இரு அணிகள் இடையே நடந்த போட்டி 4 மணி 17 நொடிகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது ( பிப் 6 ஆம் தேதி 4.17 மணியளவில்தான் துருக்கி - சிரிய எல்லை பூகம்பம் ஏற்பட்டது) அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்த டெடிபியர் பொம்மைகளை மைதானத்தில் தூக்கி எறிந்தனர். இதனால் அங்கு டெடிபியர் மழை பொழிந்தது.

இந்த பொம்மைகள் அனைத்தும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று பெசிக்டாஸ் அணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெசிக்டாஸ் அணி கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மன உறுதியை அளிக்கும் வகையில், போட்டியின் போது, ​​'இந்த பொம்மை எனது நண்பன்' என்ற நிகழ்ச்சிக்கு எங்கள் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பொம்பைகள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x