Published : 20 May 2017 07:55 AM
Last Updated : 20 May 2017 07:55 AM

நீதிமன்ற உத்தரவால் பகைமையை கைவிடுமா பாகிஸ்தான்?

இந்தியர்களின் வயிற்றில் பால் வார்த்து இருக்கிறது சர்வதேச நீதிமன்றம். இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச நீதி மன்றம் வழங்கி இருக்கும் இந்த இடைக்கால தீர்ப்பு, பல விதங்களில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. நீதிமன்றமும் சரி, வழக்கில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் சரி, மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கை அணுகவில்லை.

ராஜ்ஜிய உறவு, சர்வதேச உடன்படிக்கை, மனித உரிமை மீறல் என்கிற கோணத்தில் மட்டுமே வாதிடப்பட்டது. இதன் அடிப்படையில்தான் இடைக்கால தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று கேள்விகளை சர்வதேச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. முதலாவது, இந்த வழக்கை விசாரிப்பதற்கான அடிப் படை முகாந்திரமும் அதிகார வரம்பும் இந்த மன்றத்துக்கு உள்ளதா? அதாவது, சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குதானா?

2017, மே 8 அன்று, இடைக்கால நடவடிக்கை வேண்டி இந்த நீதிமன்றத்தில் இந்தியா, மனுத் தாக்கல் செய்தது. பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜாதவ் வழக்கில், வியன்னா உடன்பாடு மீறப்பட்டு உள்ளதாக, அந்நாட்டுக்கு எதிராக இந்தியா புகார் கூறியது.

1963 ஏப்ரலில் வியன்னாவில் நடந்த மாநாட்டில், இரு நாடு களுக்கு இடையே தூதரக, ராஜ்ஜிய உறவுகள் குறித்து ஓர் உடன் படிக்கை எட்டப்பட்டது. இதனை இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இதற்கு பாதகம் எழும் பட்சத்தில், அதனைச் சட்டப் படி தீர்த்து வைக்கும் பொறுப்பு சர்வதேச நீதிமன்றத்துக்கு வழங் கப்பட்டது. அந்த அடிப்படையில் தான் இந்தியா சர்வதேச நீதி மன்றத்தை நாடியது.

மேலும் இந்தியா தனது மனுவில், (மிக சாமர்த்தியமாக) வியன்னா உடன்பாட்டின் அடிப் படையில் நிவாரணம் கோருகிறது. அந்த வரம்புக்குள் இந்த வழக்கு வருவதால், இதனை விசாரிக்கத் தனக்கு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டது.

அடுத்ததாக, தூதரக அறிவிக்கை கள், ஒரு நாட்டுக்கும் அதன் குடிமகன்களுக்கும் இடையிலான தொடர்பு; சிறை பிடிக்கப்பட்ட நாட்டில் தன் குடிமகனுக்கான தூதரக உதவி உள்ளிட்ட இந்தியா கோரும் உரிமைகள், (நடைமுறை யில்) உண்மையிலேயே உள்ளவை தாம் என்று இடைக்காலத் தீர்ப்பு சந்தேகத்துக்கு இடமின்றி கூறு கிறது.

நிறைவாக, இந்த வழக்கில் சரிசெய்ய முடியாத ஆபத்தும் அவசரமும் உள்ளதா என்று ஆராய்ந்தது. ஜாதவுக்கு விதிக்கப் பட்ட மரணதண்டனை எந்த நேரத்தி லும் நிறைவேற்றப்படலாம் என்ற அச்சமே வழக்கின் அவசரத்தை உணர்த்தியது.

ஆகஸ்ட் 2017-க்கு முன்பாக ஜாதவுக்கு மரணதண்டனை நிறை வேற்றப்படாது என்ற பாகிஸ்தா னின் கூற்றை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. அதாவது அதற்குப் பிறகு, இந்த நீதிமன்றத்தின் இறுதி ஆணைக்கு முன்னதாக, எப்போது வேண்டுமானாலும் அவர் கொல்லப்படலாம் என்கிற ஆபத்து தெளிவாகிறது. இறுதி ஆணைக்கு முன்னதாக அவர் கொல்லப்பட மாட்டார் என்று பாகிஸ்தான் எந்த உத்தரவாத மும் அளிக்கவில்லை. ஆகவே இந்த வழக்கில் அவசரம் இருப்பதாகவே நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மொத்தத்தில், தனக்குத் தானே எழுப்பிக்கொண்ட மூன்று கேள்வி களுக்குமே, இந்தியாவுக்குச் சாதக மான பதிலை சர்வதேச நீதிமன்றம் ஒரே குரலில் முன்வைத்து இருக்கிறது. இந்தியாவின் வாதங் களும் நிலைப்பாடும் சட்டப்படி மிகச் சரியானது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இதன் மீதுதான் தனது இடைக்காலத் தீர்ப்பை, வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

இப்படி பல்வேறு அம்சங்களை யும் பகுத்து ஆய்ந்து, சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அத்துடன் இடைக்கால ஆணையை பாகிஸ் தான் செயல்படுத்துகிறதா? என்பதையும் சர்வதேச நீதிமன்றம் தற்போது உற்று நோக்க தொடங்கி யிருக்கிறது.

வியன்னா உடன்பாடு வலியுறுத் தும் தூதரக உதவிகள் ஜாதவுக்கு மறுக்கப்பட்டதை இடைக்காலத் தீர்ப்பு ஏறத்தாழ உறுதி செய்து உள்ளது. இதன் காரணமாக ஜாதவ் மீதான வழக்கு மீண்டும் முதலில் இருந்து நடக்கலாம்.

ஏற்கெனவே, ஜாதவின் கைது குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. தாலிபான் கள் அவரை சிறைப் பிடித்து, பாகிஸ்தான் உளவுத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. எங்கே யாரால் எப்போது சிறை பிடிக்கப்பட்டார் என்பது தொடங்கி, பல நூறு கேள்விகளுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தானை, தீவிரவாத எதிர்ப்பு நாடாக ஏற்றுக் கொள் வதில், இன்னமும் பல நாடு களுக்குத் தயக்கம் இருக்கவே செய்கிறது. இந்தத் தோற்றத்தை மாற்றிக்கொள்ள ஜாதவ் வழக்கு பயன்படலாம் என்கிற கோணத்தில் அங்குள்ள ஜனநாயகவாதிகள் செயல்படலாம். எதுவும் நடக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பும் பகைமை உணர்ச்சியும், எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதை பாகிஸ்தான் எப்போது உணர்ந்துகொள்ளப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x