Last Updated : 02 Dec, 2016 09:55 AM

 

Published : 02 Dec 2016 09:55 AM
Last Updated : 02 Dec 2016 09:55 AM

அணு ஆயுத சோதனையை கைவிட மறுக்கும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை: ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை

அணு ஆயுத சோதனையை கைவிட மறுக்கும் வடகொரியா மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் மேலும் கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையையும் ஏவுகணை சோதனையையும் நடத்தி வருகிறது. இதையடுத்து அந்த நாட்டின் மீதான பொருளாதார தடையை மேலும் கடுமையாக்குவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது.

இந்தத் தீர்மானம் தொடர்பாக, கவுன்சிலின் உறுப்பு நாடான சீனாவுடன் கடந்த 3 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இந்தத் தீர்மானம் 15-0 என்ற வாக்குகள் அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனைத்து அணு ஆயுத திட்டங்களையும் வடகொரியா கைவிட வேண்டும் என இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. மேலும் அந்நாட்டின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரி ஏற்றுமதிக்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டில் 75 லட்சம் டன்னுக்கு மேல் நிலக்கரியை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015-ல் அந்த நாடு ஏற்றுமதி செய்த நிலக்கரி அளவோடு ஒப்பிடும்போது 62 சதவீதம் குறைவு ஆகும்.

இதுகுறித்து ஐநாவுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தத் தடையின் மூலம் வடகொரியாவுக்கு ரூ.4,760 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் அணு ஆயுத தயாரிப்புக்கான செலவை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறும் போது, “அணு ஆயுத சோதனை யைக் கைவிட மறுக்கும் வடகொரி யாவுக்கான பொருளாதார தடையை மேலும் கடுமையாக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை அனைத்து நாடுகளும் அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற செய்தி அந்த நாட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், அந்த நாட்டின் பொதுமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யவும் ஐநா. தயாராக உள்ளது” என்றார்.

வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது. வடகொரியா நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் ஒரு சில நாடுகளில் சீனாவும் ஒன்றாக விளங்குகிறது. ராஜதந்திர ரீதியாக வடகொரியாவுக்கு சீனா உதவி வருகிறது. ஆனாலும், கிம் ஜாங் உன் வடகொரியாவின் அதிபராக பொறுப்பேற்றது முதல் அந்த நாட்டின் நடவடிக்கையில் சீனா அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐநா.வுக்கான சீன தூதர் லியு ஜீயி கூறும்போது, “வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தி யதை நாங்கள் கடுமையாக எதிர்த் தோம். அதேநேரம், அப்பகுதியில் சில நாடுகள் (தென்கொரியா, அமெரிக்கா) ராணுவத்தை குவித்த தும் கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதும் பதற்றத்தை அதிகரித்தது” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x