Published : 05 Oct 2022 07:56 PM
Last Updated : 05 Oct 2022 07:56 PM

சர்வதேச சமூகத்திடம் இருந்து ரஷ்ய அதிபர் புதின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்: அமெரிக்கா

கரின் ஜீன் பெர்ரி

வாஷிங்டன்: சர்வதேச சமூகத்திடம் இருந்து ரஷ்ய அதிபர் புடின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். அப்போது, பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி, ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பெர்ரி கூறியதாவது: “உலக நாடுகள் வெளிப்படையாக பேச வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். தொடர்ந்து பேச வேண்டும், தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாகத்தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன்.

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தபோது போர் குறித்து பிரதமர் மோடி கூறியது மிகச் சரியானது. இது போருக்கான நேரம் இல்லை என மோடி, புதினிடம் நேரடியாகக் கூறினார். சர்வதேச சமூகத்திடம் இருந்து புதின் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்.

அணு ஆயுத அச்சுறுத்தலைப் பொறுத்தவரை, நாங்கள் மிக மிகத் தெளிவாக இருக்கிறோம். எங்களின் அணு ஆயுத வியூகம் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை. அதேநேரத்தில், ரஷ்யா அணு ஆயுத யுத்தத்திற்கு தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறியையும் நாங்கள் காணவில்லை.

உக்ரைனைப் பொறுத்தவரை அந்நாடு, தனது இறையாண்மையைப் பாதுகாக்க போராடி வருகிறது. ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால், அந்த நாட்டின் சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். உக்ரைனின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அந்த நாட்டை ஆதரிக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x