Published : 01 Oct 2022 09:09 AM
Last Updated : 01 Oct 2022 09:09 AM

சட்டவிரோத இணைப்பு விவகாரம் | ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ்

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சட்டவிரோத இணைப்பு விவகாரம் குறித்து நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க் உள்ளிட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இதனை இந்தியா புறக்கணித்துள்ளது.

15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தன. இதில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ், இந்திய அரசு எப்போது அமைதி, பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான உறவுகளின் பக்கமே நிற்கிறது. உக்ரைனில் அண்மையில் நடந்துள்ள நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. இருப்பினும் இந்தப் பிரச்சினையின் முழுமையான நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணிக்கிறது என்றார். இந்த தீர்மானத்தினை 10 நாடுகள் ஆதரித்த நிலையில் இந்தியாவுடன் சீனா, பிரேசில் மற்றும் கபோன் நாடுகள் புறக்கணித்தன.

4 நகரங்கள் இணைக்கப்பட்ட பின்னணி: கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் பொது வாக்கெடுப்பையும் நடத்தினர். ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ஆக்கிரமித்த ரஷ்யா, பின்னர் வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டதை போல் இந்த நகரங்களையும் தங்களுடன் இணைக்க ரஷ்ய மேற்கொண்ட முயற்சிக்கு உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன. எனினும், தற்போது இந்த நகரங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x