Published : 25 Sep 2022 05:59 AM
Last Updated : 25 Sep 2022 05:59 AM

சீனாவில் ராணுவப் புரட்சி | வீட்டுச் சிறையில் அதிபர் ஜி ஜின்பிங்? - சமூக ஊடகங்களில் பரவும் தகவல்

பெய்ஜிங்: சீன அதிபர் பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை.

இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.

சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து அதிபர் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. அதேபோல, சீன மக்கள் பலர் தங்கள் ட்விட்டரில் "அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்ற தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிஎல்ஏ அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளதாகவும், சீனாவின் அதிபராக லீ கியாமிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ராணுவத்தின் வாகனங்கள் கடந்த 22-ம் தேதியே தலைநகர் பெய்ஜிங் நோக்கிச் செல்லத் தொடங்கின என்றும், ஹூவான்லாய் மாகாணத்திலிருந்து, ஹெபே மாகாணத்தின் ஜாங்கியாகோ நகர் வரை 80 கி.மீ. தொலைவுக்கு ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாகவும் கூறப் படுகிறது.

ஜெனிபர் ஜெங் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், "சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அதிபருமான ஜி ஜின்பிங்கை சீன மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதால், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் பரவுவது ஏன்?

சீனாவில் 2 மூத்த அமைச்சர்களுக்கு மரண தண்டனையும், 4 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் இந்த வாரம் விதிக்கப்பட்டது. இவர்கள் சீன அதிபருக்கு எதிராக அரசியல் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜி ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்படுபவர்கள், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பரப்புவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x