Published : 31 Aug 2022 05:15 AM
Last Updated : 31 Aug 2022 05:15 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானை கட்டமைக்க ரூ.80 ஆயிரம் கோடி தேவை - திட்ட அமைச்சர் அசன் இக்பால் தகவல்

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தைச் சேர்ந்த 5 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நேற்று வெள்ளம் சூழ்ந்த நிலையில் காணப்படும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சோஹ்பாட் புர் நகரம். படம்: பிடிஐ

இஸ்லாமாபாத்: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய ரூ.80 ஆயிரம் கோடி தேவை என்று அந்நாட்டு திட்ட அமைச்சர் அசன் இக்பால் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்தசில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்நாட்டு மக்கள் தொகையில் 15% பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பயிர்கள் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் திட்டமிடுதல் துறை அமைச்சர் அசன் இக்பால் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மறுகட்டமைக்க சுமார் ரூ.80 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. நாட்டின் மறுகட்டமைப்பு மற்றும் மக்களின் மறுவாழ்வு பணிகளை செய்து முடிக்க 5 ஆண்டுகள் ஆகும். மேலும் வெகுவிரைவில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயமும் உள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x