Published : 25 Oct 2016 10:13 AM
Last Updated : 25 Oct 2016 10:13 AM
பிரான்ஸின் கலே முகாமில் தங்கியிருந்த அகதிகளை போலீஸார் நேற்று அப்புறப்படுத்தினர். அப்போது போலீஸாருக்கும் அகதிகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
வடக்கு பிரான்ஸ் பகுதியில் கலே துறைமுக நகரம் உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் 7 ஆயிரம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு காரணங்களால் அந்த முகாமை அகற்ற பிரான்ஸ் அரசு முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து கலே முகாமில் இருந்த அகதிகளை பிரான்ஸின் இதர அகதிகள் முகாம்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு பெருந்திரளான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
முகாமில் தங்கியிருந்த அகதிகளில் ஒரு பிரிவினர் முகாமை விட்டு வெளியேற விரும்பவில்லை. தாங்கள் பிரிட்டன் செல்ல விரும்புவதாகவும் அதனால் அங்கேயே தங்கியிருப்போம் என்றும் அறிவித்தனர்.
அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வன்முறை வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் வன்முறையை கட்டுப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 2500 அகதிகள் கலே முகாமில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இதர முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள அகதிகளும் படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT