Published : 19 Jun 2014 11:53 AM
Last Updated : 19 Jun 2014 11:53 AM

முன்னேறும் தீவிரவாதிகள்: அமெரிக்க உதவியை எதிர்நோக்கும் இராக்

இராக்கில் அரசுக்கு எதிரான தீவிரவாத படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றை கைப்பற்றிவிட்ட நிலையில், தொடர்ந்து முன்னேறி வரும் தீவிரவாத படைகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளது இராக்.

பாக்தாத் நோக்கி முன்னேறிய தீவிரவாதிகள், இராக் அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியை நேற்று (புதன்கிழமை) கைப்பற்றினர்.

இந்நிலையில், தீவிரவாதிகள் ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்துமாறு இராக் கோரியுள்ளது.

இது தொடர்பாக சவுதி அரேபியாவில் இருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இராக் வெளியுறவு அமைச்சர் ஹோஷியார் செபாரி, தீவிரவாத படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்துமாறு இராக் அரசு அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது என்றார்.

இருப்பினும், இராக்கில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு ராணுவத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது. அதற்கு உள்நாட்டு அரசியலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.

கடந்த 8 நாட்களாக சன்னி முஸ்லீம் தீவிரவாத படைகள் இராக்கில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவும் தயாராக இருப்பதாகவே வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இராக்கில் கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் சதாம் ஹூசைன் அரசை கவிழ்த்து சன்னி முஸ்லீம் படைகள் நாட்டை கைப்பற்றியபோது அமெரிக்க ராணுவம் பல கோடி பில்லியன் டாலர் செலவழித்து இராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை பாதுகாக்கும் வகையில் அங்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியிருந்தாலும், தீவிரவாதிகளுக்கு எதிராக முழுவீச்சில் தாக்குதல் நடத்த களத்தில் இறங்குவது அமெரிக்கா இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x