Last Updated : 24 May, 2016 10:57 AM

 

Published : 24 May 2016 10:57 AM
Last Updated : 24 May 2016 10:57 AM

செம்மை காணுமா செர்பியா? - 9

சென்ற நூற்றாண்டில் மிக மோசமான இனப்படுகொலை நடந்தது போஸ்னிய - செர்பிய யுத்தத்தில்தான் என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 1990-க்களில் நடைபெற்ற இந்தப் போரில் ராணுவத் தளபதியாக கொடூரமாகச் செயல்பட்ட ரட்கோ மிலாடிக் என்பவர் மீது வழக்கு நடந்து வருகிறது. அதன் இறுதிக் கட்டம் நெருங்கி விட்டது.

அது மட்டுமல்ல, உலக நாடுகளால் மறக்கவே முடியாத ஒரு செயல் தொடங் கியது ஐரோப்பிய நாடான செர்பியா வில்தான். அந்தச் செயல்பாடுதான் பல நாடுகளை வெவ்வேறு விதங்களில் பாதித்து முதலாம் உலகப் போருக்கு வழிவகுத்தது.

போஸ்னியாவுக்கு வந்திருந்த ஆஸ்திரிய இளவரசரை செர்பிய தீவிரவாத இயக்கத்தினர் படுகொலை செய்தனர். செர்பியா மீது போர் தொடுப்பதாக ஆஸ்திரியா அறிவித்தது. ஏற்கெனவே செய்து கொண்டிருந்த உடன்படிக்கை காரணமாக ரஷ்யா தனது ராணுவத்தின் ஒரு பகுதியை செர்பியாவுக்கு அனுப்பியது. ‘‘உங்கள் ராணுவத்தை வாபஸ் பெறுங்கள்’’ என்று ரஷ்யாவுக்கு ஜெர்மனி அறிக்கை அனுப்பியது. கூடவே ‘‘இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாக நீங்கள் அறிவிக்க வேண்டும்’’ என்று பிரான்ஸுக்கு உத்தர விட்டது. பிரான்ஸ் பதிலளிக்கவில்லை. ரஷ்யா மற்றும் பிரான்ஸுடன் ஜெர்மனி போர்முழக்கம் செய்தது. முதல் உலகப் போர் வெடித்தது. முதலாம் உலகப் போரில் கூட்டு நாடுகள் வென்றன. ஜெர்மனி வீழ்ந்தது.

செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தலைமையில் ஸ்லாவ் இன மக்களை (அவர்கள் அதிகமாக இருந்ததால்தான் யுகோ‘ஸ்லாவியா’) இணைக்க முயற்சி தொடங்கப்பட்டது. முதலில் மான்டே னேக்ரோ இணைக்கப்பட்டது. 1918-ல் புதிய ராஜாங்கம் (Kingdom of Serbs, Croats and Slovenes) உருவாக விதை போடப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தப் புதிய ராஜாங்கம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் எல்லைப் பகுதிகள் மேலும் கொஞ்சம் விரிவாக்கப்பட்டன.

பின்னர் அதிலிருந்த (க்ரோவேஷியாவைச் சேர்ந்த) க்ரோட் இனத்தவர்கள் தன்னாட்சி உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள். இப்படிக் குரல் கொடுத்த க்ரோட் தலைவர் ஒருவரை செர்பிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்தார். கலவரங்கள் அதிகமாயின.

கலவரங்களை அடக்க ராஜாங்கத்தின் மன்னர் அலெக்ஸாண்டர் (மாவீரர் என்று நாம் அறியப்படுகிற கிரேக்க நாட்டு அலெக் ஸாண்டர் இவர் அல்ல) தன் சர்வாதிகாரத் தைச் செலுத்தத் தொடங்கினார். நாட்டின் பெயரை யுகோஸ்லாவியா என்று மாற்றினார். 1945-ல் உருவான யுகோஸ்லாவியாவில் 6 குடியரசுகள் இருந்தன. அவை செர்பியா, மான்டேனேக்ரோ, ஸ்லோவினியா, க்ரோவேஷியா, போஸ்னியா மற்றும் மாசிடோனியா (போஸ்னியாவின் முழுப்பெயர் போஸ்னிய - ஹெர்ஜகோவினா. ஒரு வசதிக்காக இதை போஸ்னியா என்றே குறிப்பிடுவோம்).

காலம் நகர்ந்தது. உலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தலைவரின் கையில் யுகோஸ்லாவியா ஆட்சி வந்து சேர்ந்தது. இனி..

1918-ல் தெற்கு ஸ்லாவ் இன மக்களின் கூட்டமைப்பாக உருவானது யுகோஸ்லாவிய ராஜாங்கம் என்றோம். முதலாம் உலகப்

போருக்குப் பிறகு உருவான இந்தக் கூட்டமைப்பில் இரண்டாம் உலகப் போர் வரைகூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.

1943-ல் மீண்டும் ஒரு பெருமுயற்சி காரணமாக சோஷலிஸ யுகோஸ்லாவிய குடியரசுகளின் கூட்டமைப்பு உருவானது. இது கொஞ்சம் நிலையாக இருந்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் டிட்டோ எனும் உறுதிமிக்க தலைவர்.

யுகோஸ்லாவியா ராணுவத்தில் தீவிரப் பங்காற்றினார் டிட்டோ. நாஜி இயக்கத்திற்கு எதிரான இயக்கத்தில் பெரும் பங்காற்றினார்.

க்ரோவேஷியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தவர் டிட்டோ. எந்த அரசியல் சாயமும் இல்லாமல்தான் இவர் பள்ளிப் பருவம் கழிந்தது. பின்னர் மெக்கானிக்காக பணிபுரிந் தார். முதலாம் உலகப் போரின்போது ஆஸ்திரியா-ஹங்கேரிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் போரில் காயம் ஏற்பட்டு ரஷ்யர்களின் பிடியில் அகப்பட்டார். பின்னர் செம்படையில் சேர்ந்தார். (ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் பெரிதாக வளர்ந்த கம்யூனிஸ்ட் அணி இது).

1920-ல் மீண்டும் க்ரோவேஷியாவிற்குத் திரும்பினார். யுகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ செயல்பாடுகள் காரணமாக கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் கழிக்க நேர்ந்தது. என்றாலும் இந்த செயல்பாடும் சிறைவாசமுமேகூட அவருக்குப் பெரும் புகழை அளித்தன.

தன் கட்சியை மிகவும் சீரமைத்தார். கட்டுப்பாடுகள் நிறைந்த கட்சியாக அதை உருமாற்றினார்.. இரண்டாம் உலகப்போரின் போது தன் கட்சியை பெரும் பலம் மிக்கதாக அறிமுகப்படுத்தினார். ஜெர்மனி யுகோஸ்லாவியாவை 1941-ல் (இரண்டாம் உலகப்போர்) ஆக்கிரமித்தபோது அதை எதிர்த்தார். அதே சமயம் கம்யூனிஸத்தைவிட தேச ஒற்றுமைக்குதான் டிட்டோ முன்னுரிமை கொடுக்கிறார் என்று அவரது கட்சியிலேயே சலசலப்பு உண்டானது.

ஆகஸ்ட் 1945-ல் யுகோஸ்லாவியா குடியரசு உருவானபோது அதன் பிரதமர் ஆனார். 1953 வரை அதன் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் விளங்கினார். ராணுவத் தளபதி மிஹஜ்லோவிக் என்பவருக்கு 1946-ல் இவர் தூக்கு தண்டனை விதித்தபோது அது பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது. பலப்பல வருடங்களாகவே தனிப்பட்ட முறையிலும் டிட்டோவை இவர் விமர்சித்ததுதான் இதற்கு உண்மையான காரணம் என்று கூறப்பட்டது.

சோவியத் யூனியன் போலவே யுகோஸ்லாவியாவும் விளங்க வேண்டும் என்று விரும்பினார் டிட்டோ. இதற்காக கிட்டத்தட்ட சர்வாதிகாரியாகவே செயல் பட்டார். ஆட்சிக் குழு இவரை ‘வாழ்நாள் முழுவதும் அதிபர்’ என்று அறிவித்தது.

ஆனால் 1953-ல் சோவியத் யூனியனுடன் இவர் மாறுபடத் தொடங்கினார். முக்கிய மாக ஸ்டாலினின் திட்டங்களை இவர் ஏற்கவில்லை.

ஸ்டாலின் இறந்த பிறகு கூட்டு சேரா நாடுகளை இணைப்பதற்கு டிட்டோ முயன் றார். அரபு நாடுகளோடு இணக்கமாக இருந்தார். இஸ்ரேலை எதிர்த்தார். ஹங்கேரியை சோவியத் யூனியன் ஆக்கிர மித்தபோதும் அதை விமர்சித்தார். ஐ.நா.வின் முக்கிய உறுப்பினராக யுகோஸ்லாவியா விளங்கியது. உலக சமாதானத்துக்கு பலவிதங்களில் பங்களிப்பைச் செய்தது.

டிட்டோவின் மனைவி ஒரு ரஷ்யப் பெண்மணி. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தன்னைவிட அதிக வயது இளையவரான ஒரு செர்பியப் பெண்மணியையும் மணந்து கொண்டார். டிட்டோவின் பல வெளிநாட்டுப் பயணங்களில் இந்தப் பெண்மணியும் கலந்து கொண்டார். 1980 மே 5 அன்று தான் இறக்கும்வரை யுகோஸ்லாவியாவின் தலைமைப் பதவியை டிட்டோ இழக்கவில்லை.

டிட்டோவின் ஆட்சியின்போது பிற குடியரசுகள் ஓரளவு திருப்தியுடன் இருந் தாலும், க்ரோவேஷியாவும், செர்பியாவும் அதிருப்தியோடுதான் இருந்தன. இவை இரண்டும் ஒன்றை ஒன்று கடும் போட்டி யாளராகவே பார்த்தது. கூட்டமைப்பு அரசிய லில் செர்புகளின் பங்கு அதிகம் இருந்த தாக க்ரோவேஷியா கருதியது. பல தொழிற்சாலைகள் க்ரோவேஷியாவில் தொடங்கப்பட்டதாக செர்பியா பொறா மைப்பட்டது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x