Published : 14 Jul 2022 11:32 PM
Last Updated : 14 Jul 2022 11:32 PM

இலங்கை அதிபர் கோத்தபய ராஜினாமா; சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்த பின் இ-மெயில்

சிங்கப்பூர்: இலங்கையின் அதிபராக இயங்கி வந்த கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்த நிலையில் இ-மெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் மக்கள் உணவு, எரிபொருள், மருந்து மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கள் அந்த நாட்டின் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராடினார். தொடர்ந்து மாளிகைக்குள் நுழைந்தனர். அதே நேரத்தில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பினார்.

தொடர்ந்து இலங்கையில் இருந்து தனது மனைவியுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார் அவர். முதலில் மாலத்தீவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இப்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் பயணித்த விமானத்தை உலகில் அதிகம் பேர் ட்ராக் செய்திருந்தனர்.

இந்நிலையில், அவருக்கு தங்கள் நாட்டில் தஞ்சம் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம். அதே நேரத்தில் அவர் தஞ்சம் கேட்கவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. அவர் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் அவர் தஞ்சம் புகுந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க கூடாது என கடுமையான கண்டன குரல்களை எழுப்பி இருந்தனர் புலம்பெயர்ந்து வந்த மக்கள். தனக்கு பதிலாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிபராக செயல்படுவார் என தெரிவித்திருந்தார் ராஜபக்ச. அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்றே கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில் இலங்கையில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறினர்.

இந்நிலையில், வியாழன் அன்று கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார். இதனை உறுதி செய்ததும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என அவைத் தலைவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x