Published : 24 May 2022 09:20 AM
Last Updated : 24 May 2022 09:20 AM

இந்தோ - பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக குவாட் உருவெடுத்துள்ளது: பிரதமர் மோடி

உலக அரங்கில் குவாட் அமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். குவாட் அமைப்பு சக்தி வாய்ந்ததாக அதிகாரம் மிக்கதாக உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

டோக்கியாவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரை தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், "கரோனா நெருக்கடி காலத்தில் குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஒருவொருக்கு ஒருவர் தடுப்பூசிகளை வழங்கி உறுதுணையாக இருந்துள்ளது. காலநிலை மாற்றம், வழங்கல் சங்கிலி, பேரிடர் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு என பல வகையிலும் குவாட் நாடுகள் ஒற்றுமையுடன் திகழ்கின்றன.

இது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. குவாட் கூட்டமைப்பு ஸ்திரமான கொள்கையுடன் முன்னேறிச் செல்கிறது. இது இன்னும் வலுவான கூட்டமைப்பாக உருவாகும்" என்றார்.

முன்னதாக, குவாட் உச்சி மாநாட்டில் முதல் நபராகப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘‘உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவீதத்தை கூட்டமைப்பு நாடுகள் கொண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும்" என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இன்று (காலை) அவர் தனியாக சந்தித்து பேசுகிறார். ஆஸ்திரேலிய பிரதமராக தேர்வாகியுள்ள அந்தோணி அல்பானீஸை சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற அந்தஸ்தை பிரதமர் மோடி பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x