Published : 09 May 2022 04:32 PM
Last Updated : 09 May 2022 04:32 PM

மகிந்தா ராஜபக்சே ராஜினாமா: போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்; இலங்கையில் பதற்றம்

கொழும்பு: இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கம்புகளால் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பற்றமான சூழலில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் செய்தது. இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு தற்போது மீண்டும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது.

இதனால் இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையில் போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிபர் மாளிகைக்கு எதிரே முகாமிட்டு போராடி வந்த போராட்டக்காரர்கள் மீது கம்புகளை கொண்டு ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர்.

இதுமட்டுமின்றி அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். மேலும் இதர கட்டமைப்புகளையும் அடித்து நொறுக்கினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

பரஸ்பரம் மோதிக் கொண்ட இரு தரப்பையும் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் விரட்டி அடித்தனர். இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் நடந்த சிறப்பு கேபினட் கூட்டத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. தான் பதவி விலகுவது எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதைச் செய்ய தான் தயாராக இருப்பதாக கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே உருக்கமாகப் பேசியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x