Published : 18 Apr 2022 06:35 PM
Last Updated : 18 Apr 2022 06:35 PM

அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா தாமதிப்பதாக ஈரான் குற்றச்சாட்டு

தெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க அமெரிக்கா தாமதம் செய்து வருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே கூறும்போது, “ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இன்னும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில் தாமதம் செய்து வருகிறது. கடந்த வாரம் ஹென்றி மோரா (ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்) மூலம் அமெரிக்க வழங்கிய செய்தி, ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதற்கான காலத்தை நீடிக்கக் கூடியதாக இருக்கிறது” என்றார்.

ஈரான் கடந்த ஆண்டு முதலே பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவுடன் நேரடியாகவும், அமெரிக்காவுடன் மறைமுகமாகவும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.

பின்னணி: அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.

மேலும், தெஹ்ரானுக்குத் தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஆண்டு பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x