Published : 04 Apr 2022 10:34 PM
Last Updated : 04 Apr 2022 10:34 PM

இலங்கை நெருக்கடி | அதிகரிக்கும் அரசியல் குழப்பம், வலுக்கும் மக்கள் போராட்டம் - முட்டி மோதும் கோத்தபய ராஜபக்சே டீம்!

கொழும்பு: "தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து நாடு தப்பிப் பிழைக்கும். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகமாட்டார்" என இலங்கையின் ஆளும்கட்சித் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அந்நியச்செலாவணி எதிர்பாராத அளவிற்கு குறைந்து, வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததால் அந்நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் இறக்குமதி, அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்முடியாமல் நாடு திண்டாடி வருகிறது. இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் அதிக நேரம் காத்திருந்து எரிபொருள் வாங்க வேண்டியுள்ளது. மக்கள் மின்சாரம், குடிநீர், உணவு, அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆத்திரமைடந்து மக்கள் வீதிகளில் இறங்கி, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வெள்ளிக்கிழமை இரவு இலங்கையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அதிபர் வீட்டை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், சனிக்கிழமை இரவு 36 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இலங்கையில் தொடர்ந்து போராட்டம் பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டன. இந்த தடை குறித்து அந்நாட்டின் அமைச்சரும் பிரதமரின் மகனுமான நமல் ராஜபக்ச ‘‘விபிஎன் நெட்வொர்க் கிடைக்கும்போது சமூக ஊடகங்களை முடக்குவது பயனற்ற செயல். எனவே, இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று விமர்சித்திருந்தார்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையை எதிர்த்து ஆளுங்கட்சியினர் பதவி விலகக் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர், அதிபரைத் தவிர்த்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த அமைச்சர்கள் ராஜினாமா எதிரொலியாக இலங்கையில் திங்கள்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க விரும்புவதாகவும், அமைச்சரவை பொறுப்புகளை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது சகோதரரும், நாட்டின் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்தார். அவரது இடத்தில், நீதித்துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார். "அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் சூழலில், நான் இன்று எனது ராஜினாமாவை, @CBSLஆளுநர், ஜனாதிபதி கோத்தபய ராஜபசேவிடம் சமர்ப்பித்துள்ளேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம்தாசா நெருக்கடியான இந்த நேரத்தில் இலங்கைக்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் "தயவுசெய்து முடிந்தவரை இலங்கைக்கு உதவ முயற்சிக்கவும். இது எங்கள் தாய்நாடு, நாங்கள் எங்கள் தாய்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்ய மாட்டார் என்றும், தற்போதைய நெருக்கடியில் அரசாங்கம் தப்பிப் பிழைக்கும் என்றும் நாட்டின் ஆளும் கட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கையின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான எஸ்.ஜே.பி மற்றும் ஜே.வி.பி ஆகியன அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க கோத்தபய விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கை மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ”கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்” என்ற பதாகைகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் முக்கிய பல்கலைக்கழகங்களிலும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x