Published : 14 Mar 2022 06:29 PM
Last Updated : 14 Mar 2022 06:29 PM

உக்ரைன் மருத்துவமனை மீதான ரஷ்ய குண்டுவீச்சில் காயமடைந்த கர்ப்பிணித் தாய் தன் சேயுடன் உயிரிழப்பு

மருத்துவமனை மீதான குண்டுவீச்சுத் தாக்குதலில் காமடைந்த கர்ப்பிணி வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட போது...

மரியுபோல்: உக்ரைனின் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையின் மீது ரஷ்யா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணித் தாய் தனது பச்சிளங்குழந்தையுடன் உயிரிழந்தார்.

சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதியிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், கார்கீவ், துறைமுக நகரமான மரியுபோல் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று (மார்ச் 9) மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் குண்டு வீசித் தாக்கியன. இந்தத் தாக்குதலில் கர்ப்பிணி ஒருவர் காயமடைந்தார். படுகாயமடைந்திருந்த அவர், நகர முற்றுகை மற்றும் இடிபாடுகளுக்கிடையில் சிகிச்சைக்காக ஸ்டெக்சரில் வைத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அந்தப் பெண் தனது ரத்தத்துடன் இருந்த அடிவயிற்றில் அடிப்பதை உலகமே பார்த்தது; அதனை போர்க் குற்றம் என கண்டித்தது.

"மருத்துவமனை அழிக்கப்பட்டதும் அந்தப் பெண்ணிற்கு வேறொரு இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானத் தாக்குதலில் அப்பெண்ணின் இடுப்பெலும்பு நசுங்கி துண்டிக்கப்பட்டது. நாங்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்தோம். குழந்தை இறந்துவிட்டதை அறிந்த அந்தப் பெண் தன்னையும் கொன்றுவிடும் படி அலறினார். அவரைக் காப்பாற்ற அரைமணி நேரம் போராடினோம். முயற்சி பலனளிக்கவில்லை. அவரும் இறந்துவிட்டார்" என்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் குறித்து மரியுபோல் துணைமேயர் செர்கை ஒர்லோவ் கூறுகையில், "700 படுக்கைகளைக் கொண்ட குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். 17 காயமடைந்தனர். இது முற்றிலும் ஒரு போர்க் குற்றமே" என்றார்.

மருத்துவமனை மீது நடந்த இந்தத் தாக்குதலால் ரஷ்யா இனப்படுகொலை நடத்தியுள்ளது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், "மருத்துவமனையின் மீது நடந்த தாக்குதல் ஒரு பெருந்துயரமே. அந்தப் பகுதியை உக்ரைன் ராணுவம் தன் வசம் வைத்திருந்தது தாக்குதல் நடந்த நேரத்தில் மருத்துவமனையில் மக்கள் யாரும் இல்லை" என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

’போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்களை வெளியேற அனுமத்துவிட்டு ரஷ்ய படை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய இரண்டு வாரங்களில் மரியுபோலில் 2,500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x