Published : 13 Mar 2022 06:10 AM
Last Updated : 13 Mar 2022 06:10 AM

பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை: உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு

ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக சீறிப் பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரில் விழுந்தது. ஏவுகணை விழுந்த இடத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் ஆய்வு செய்கின்றனர்.படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி

ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்தது குறித்து உயர்நிலை விசாரணை நடத்த மத்திய பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சானிக் ஏவுகணைகளின் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக ஒரு ஏவுகணை சீறிப் பாய்ந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரின் மீது விழுந்தது. அங்குள்ள குடியிருப்பு கள் சேதமடைந்தன.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பராமரிப்பு நடைமுறைகளின் போது தவறாக ஏவுகணை விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லையில் விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும் ஏவுகணை பாய்ந்தது வருத்தத்துக்கு உரியது. இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்துள்ளது. இதற்கு இந்திய அரசு மேலோட்டமாக விளக்கம் அளித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இருதரப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கூறும்போது, "ஏவுகணை விவகாரம் குறித்து இந்திய தூதரை வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளோம். இந்திய தரப்பில் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிடுவோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x