Published : 11 Mar 2022 01:05 PM
Last Updated : 11 Mar 2022 01:05 PM

புரட்சியாளர் சே குவேராவை சுட்டுக் கொன்ற பொலிவியா ராணுவ வீரர் உயிரிழப்பு

சேகுவேரா ( இடது), மரியோ டெரான் (வலது).

சுக்ரே: மார்க்சிஸ்ட் புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி சுட்டுக் கொன்றவராக அறியப்படும் பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பொலிவியா காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்திருந்த சேகுவேரா பட்டினியாலும், ஆஸ்துமா நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைப் பயன்படுத்தி கியூப - அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் உதவியுடன் பொலிவிய ராணுவத்தினர் அக்டோபர் 8 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு சே குவேராவைப் பிடித்தனர். பின்னர் பொலிவிய ராணுவ வீரர்களால் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் சேகுவேராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவராக அறியப்படும், பொலிய ராணுவ வீரர் மரியோ டெரான் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இந்தச் செய்தியை அவரது உறவினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

சே குவேராவை கொன்ற நிகழ்வை மரியோ டெரான் ஒரு முறை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர், ”சிறைப்பிடிக்கப்பட்ட சேகுவேரா, லா ஹிகுவேரா பகுதியில் பாழடைந்த பள்ளிக்கு அழைத்து வரப்பட்டார். அது என் வாழ்வின் மிக மோசமான தருணம். அந்த நேரத்தில் சே பிரம்மாண்டமாக தோற்றமளித்தார். அவரது கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.சேவின் பார்வை என் மீது விழும்போது எனக்கு மயக்கம் ஏற்பட்டது. ஒரே ஒரு விரைவான கண் அசைவால் சே என்னை நிராயுதபாணியாக்க முடியும் என்பதை நான் அப்போது உணர்ந்தேன். சே என்னை நோக்கி அமைதியாக இருங்கள் என்று கூறினார், என்னை நன்றாகப் பாருங்கள். நீங்கள் ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள் என்றார். அதனைத் தொடர்ந்து நான் அந்த அறையின் வாசல் பக்கம் சென்றேன். கண்களை மூடிக் கொண்டு சே வை நோக்கி துப்பாக்கியால் சுட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

யார் இந்த சேகுவேரா? அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சே குவேரா அடிப்படையில் மருத்துவர். இளம் வயதில் இருந்தே சே குவேரா உலக நாடுகளில் நிலவும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார்.

வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், க்யூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போரில் ஈடுபட்டார். கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடனான சே குவேராவின் நட்பு இன்றளவு புரட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், சமூகப் புரட்சியின் அடையாளமாக கருதப்படும் சேகுவேரா தனது 39 வயதில் கொல்லப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x