Published : 23 Apr 2016 10:06 AM
Last Updated : 23 Apr 2016 10:06 AM

உலக மசாலா: நாய்களுக்கு ஸ்பெஷல் சரணாலயம்!

கோஸ்டரிகாவில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் இதமான பருவநிலை இங்கே நிலவுகிறது. ஆதரவற்ற 900 நாய்கள் பராமரிக்கப்படுகின்றன. ஏராளமான கலப்பின நாய்களும் புதிதாகப் பிறக்கின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இந்த நாய்களின் சரணாலயத்தை நடத்தி வருகிறது. நாய்கள் மீது அன்பு கொண்டவர்கள், இங்கே வந்து நாய்களுடன் நேரத்தைச் செலவிடலாம். விருப்பமான நாய்களைத் தத்தெடுத்துக்கொள்ளலாம். நாய்களுக்குச் சத்தான உணவுகள் அளிக்கப்படுகின்றன. நாய்களைக் குளிக்க வைத்து, முறையாகப் பராமரிக்கிறார்கள். பகல் முழுவதும் நாய்கள் பசுமையான குன்றில் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன.

’’இந்தச் சரணாலயத்தை நல்ல உள்ளங்களின் நன்கொடையால் நடத்தி வருகிறோம். கோஸ்ட ரிகாவில் மட்டுமே 10 லட்சம் நாய்கள் ஆதரவற்று அலைகின்றன. அவற்றில் ஆயிரம் நாய்களை மட்டுமே எங்களால் இங்கு பராமரிக்க முடிகிறது. பல மணி நேரங்களைச் செலவிட்டு, நாய்களைப் பராமரிக்கிறோம். 600 வகை நாய்கள் இங்கே இருக்கின்றன. நோஞ்சான் நாய்களை ஆரோக்கியமான நாய்களாக மாற்றி தத்து கொடுத்துவிடுகிறோம். இதற்காக மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒரு நாயை மட்டும் வளர்த்தீர்கள் என்றால் மன உளைச்சல் குறையும், வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்’’ என்கிறார் இந்தச் சரணாலயத்தை நடத்தி வரும் செர்ஜியோ.

நாய்களுக்கு ஸ்பெஷல் சரணாலயம்

சில்வியா எல்பா மிக அழகான திருமண ஆடை ஒன்றை உருவாக்கியிருக் கிறார். ஆனால் அந்த ஆடையை யாராலும் அணிய இயலாது. இது கேக்கால் உருவாக்கப்பட்ட ஆடை. கேக் என்றே நம்ப முடியாத அளவுக்கு அத்தனை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சில்வியா.

‘நானும் இலின்காவும் சேர்ந்து ஒரு போட்டிக்காக இந்த கேக்கை உருவாக்கியிருக்கிறோம். 300 மணி நேரங்களைச் செலவிட்டிருக் கிறோம். 70 கிலோ எடை. 170 செ.மீ. உயரம். இதில் 12 ஆயிரம் வேஃபர் தாள்கள், 35 கிலோ க்ரீம்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். உலகிலேயே சாப்பிடக்கூடிய ஆடை இது ஒன்றுதான்! லண்டனில் நடைபெறும் சர்வதேச கேக் கண்காட்சியில் இது இடம்பெற்றுள்ளது. இந்த ஆடையை அணிய முடியாதுதான். ஆனால் திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் சுவைக்க முடியும் என்கிறார் சில்வியா.

சுவைக்கக்கூடிய ஆடை!

ஹாங்காங்கில் ரெயின்போ சாண்ட்விச் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கிறது. இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே 4 வண்ணங்களும் சுவைகளும் கொண்ட சீஸ் வைக்கப்பட்டிருக்கிறது. சூடாகச் சாப்பிடும்போது சீஸ் உருகி, கண்களைக் கவர்கிறது. நாவில் நீர் சுரக்க வைக்கிறது. சுவையும் பிரமாதமாக இருக்கிறது. புகைப்படம் எடுப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. இயற்கையான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் வண்ணம் குறித்த கவலை இல்லை. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்கள் ரெயின்போ சாண்ட்விச்சை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

மயக்கும் ரெயின்போ சாண்ட்விச்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x