Last Updated : 03 Mar, 2016 05:03 PM

 

Published : 03 Mar 2016 05:03 PM
Last Updated : 03 Mar 2016 05:03 PM

பாகிஸ்தானில் பெருகும் அணு ஆயுதங்கள்: அமெரிக்க ராணுவ புலனாய்வுத் துறை எச்சரிக்கை

பாகிஸ்தானில் தொடர்ந்து அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

ஆனால், எந்தவொரு சூழலிலும் அணு சக்தி திட்டங்கள் நிறுத்தப்படமாட்டாது என பாகிஸ்தான் நிதியமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ புலனாய்வு முகமை இயக்குநர் வின்சென்ட் ஸ்டூவர்ட் கூறியதாவது:

பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் இருப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த வளர்ச்சி குறித்து கவலை கொள்கிறோம். அணு ஆயுத உத்தி சார்ந்து தொடர்ந்து எழும் கொள்கை, விபத்தையோ, சம்பவத்தையோ ஏற்படுத்தும் என அஞ்சுகிறோம்.

பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரிக்கிறது. அது தனது திட்டங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள், கோஷ்டிப்பூசல், பிரிவினைவாதிகள் ஆகியோரால் இந்த ஆண்டு அச்சுறுத்தல் ஏற்படும். ஐஎஸ் அமைப்பும், அல்-காய்தாவும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. பாகிஸ்தானின் மேற்கு எல்லையோரத்தில் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கராச்சியில் துணை ராணுவப் படையினரின் நடவடிக்கைகள் வன்முறையைக் குறைப்பதில் ஓரளவு வெற்றியைத் தந்துள்ளன. இந்நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனக் கருதுகிறேன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தூதரக மட்ட பேச்சுவார்த்தைகள், பேச்சு வார்த்தையைத் தொடர்வதற்கான ஒப்புதல்கள் ஆகியவை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை ஓரளவு குறைத்துள்ளன. அதேசமயம், இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால், எச்சரிக்கையுடன் கூடிய பதற்றம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மீண்டும் எழக்கூடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால், பாகிஸ்தான் நிதியமைச்சர் இசாத் தார், எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும், கடன்கள் அதிகரித்தாலும் அணு சக்தி திட்டங்கள் நிறுத்தப்படமாட்டாது என பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இசாக் தார் கூறும்போது, “அணு சக்தி திட்டத்தை நிறுத்துவதற்காக நாம் அதனைத் தொடங்கவில்லை. இது நமது பாதுகாப்புக்கான திட்டம், இதனைப் பாதுகாப்பு தேசிய பொறுப்பு. பாகிஸ்தானின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதில் உரிமை உள்ளது.

நமது கடன் 10, ஆயிரம் கோடி அல்லது 100 ட்ரில்லியன் (ஒரு கோடி லட்சம்) அமெரிக்க டாலர்களாக உயர்ந்தாலும் அணு சக்தி திட்டத்தை திரும்பப் பெற மாட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x