Published : 06 Feb 2016 10:34 AM
Last Updated : 06 Feb 2016 10:34 AM

காஷ்மீர் பிரச்சினை தீர பேச்சுவார்த்தையே வழி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நம்பிக்கை

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அங்கு நேற்று ‘காஷ்மீர் தினம்’ கொண்டாடப்பட்டது. இதை யொட்டி ஆசாத் காஷ்மீர் பேரவை கூட்டுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ் தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த 70 ஆண்டுகளுக் கும் மேலாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றனர். இந்தப் பிரச்சி னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

தீவிரவாதத்தில் அதிகம் பாதிக் கப்பட்ட நாடு பாகிஸ்தான். எனவே தீவிரவாதத்தை ஒழிப்பதில் எனது தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தீவிரவாத பிரச்சினையில் இந்தியா வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப் படும். இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுத்துச் செல்லப்படும்.

சீனா-பாகிஸ்தான் வர்த்தக பாதை திட்டத்தால் ஆசாத் காஷ்மீர், கைபர் பதுன்கவா, கில்ஜித் பல்சிஸ் தான் பகுதிகள் வளர்ச்சி அடையும். இந்தப் பிராந்தியங்களில் சாலை, மின்சார வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

ஆசாத் காஷ்மீர் பிரதமர் சவுத்ரி அப்துல் மஜித் பேசியபோது,

‘‘காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா. சபையில் தெளிவாக எடுத்துரைத்தார்’’ என்று தெரிவித்தார்.

ஆசாத் காஷ்மீர் சட்டப்பேரவைத் தலைவர் ராஜா பரூக் ஹைதர் பேசியபோது, காஷ்மீர் விடுதலைப் போராட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது என்று பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x