Published : 08 Sep 2021 06:18 PM
Last Updated : 08 Sep 2021 06:18 PM

மலை உச்சியிலிருந்து தவறிவிழுந்த கேமரா மேனைக் காப்பாற்ற உயிரைவிட்ட ரஷ்ய அமைச்சர்

மலை உச்சியிலிருந்து தவறிவிழுந்த கேமரா மேனைக் காப்பாற்ற அமைச்சர் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டின் அவசரகால அமைச்சர் எவ்ஹெனி ஜினிசேவ். இவரது தலைமையில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள நகரான நாரில்ஸ்கில் துறை ரீதியான பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் 6000 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியைப் பல்வேறு ஊடகங்களும் செய்தியாக்கி வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் இந்த பயிற்சிப் பட்டறை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த கேமரா மேன் ஒருவர் ஜினிசேவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த கேமரா மேன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயற்சித்து மலை உச்சியிலிருந்து தண்ணீரில் குதித்த ரஷ்ய அமைச்சர் உயிரை இழந்தார்.

இது குறித்து அரசு நிதி உதவியில் இயங்கும் ரஷ்யா டைம்ஸ் பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மார்கரீட்டா சிமோன்யான் தனது ட்விடட்ர் பக்கத்தில், "அமைச்சர் ஜினிசேவும் கேமராமேனும் மலை உச்சியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, கேமராமேன் திடீரென தவறி விழுந்தார். அங்கே என்ன நடக்கிறது என்று மற்றவர்கள் உணர்வதற்குள் ஜினிசேவும் மலை உச்சியில் இருந்து கீழே உள்ள தண்ணீரில் குதித்தார். ஆனால் அங்கே வெளியே நீட்டிக் கொண்டிருந்த பாறை ஒன்றில் அவரது தலை மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

ரஷ்யா அரசாங்கத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் இந்த ஜினிசேவ். ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்திருக்கிறார். புதினின் விசுவாசியும் கூட. இவரது மறைவு ரஷ்யாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x