Published : 26 Aug 2021 10:33 AM
Last Updated : 26 Aug 2021 10:33 AM

குவாண்டானமோ சிறையில் இருந்தவருக்கு ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் பதவி: அமைச்சரவையை இறுதி செய்துவரும் தலிபான்கள்

அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் குவாண்டானமோ தடுப்பு முகாமில் இருந்தவரை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக தலிபான்கள் நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு முறையான ஆட்சி மாற்றத்திற்கான வேலைகளில் தலிபான்கள் இறங்கியுள்ளனர். இந்நிலையில், உள்துறை, பாதுகாப்பு, நிதியமைச்சர் பதவிக்கானோரை தலிபான்கள் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் குவாண்டானமோ தடுப்பு முகாமில் இருந்தவரை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக தலிபான்கள் நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரஞ்சு உடையும் அச்சுறுத்தும் சூழலும்:

குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் (Guantanamo Bay detention camp) என்பது தடுப்பு முகாம் விசாரணை நிலையம் என அறியப்படுகிறது. இது கியூபாவில் அமைந்துள்ள குவாண்டானமோ விரிகுடா கடற்படை முகாமில் உள்ளது. கடந்த 2002 ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் ஜீனியர் நிர்வாகத்தால் ஆப்கானிஸ்தான், இராக் போர்க் கைதிகளை சிறைவைக்க என இந்த முகாம் அமைக்கப்பட்டது. ஆனால், இன்றளவும் இந்த முகாமில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில், ஒருகாலத்தில் இந்தச் சிறையில் இருந்த முல்லா அப்துல் கயாம் ஜாகிரை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக தலிபான்கள் நியமித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர் குவாண்டனாமோ தடுப்பு முகாமில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையை இறுதி செய்யும் பணி:

அதேபோல், குல் அகா என்பவரை நிதியமைச்சராக தலிபான்கள் இறுதி செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவர், தலிபான்களின் நிதிமேலாண்மை தலைவராக இருந்தவர். அதனாலேயே இவர் மீது சர்வதேச தடை உள்ளது. சதர் இப்ரஹிம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலிபான்களின் செய்தித் தொடர்பாளரான ஜபிபுல்லா முஜாகீத் ஆப்கானிஸ்தானின் புதிய அரசின் செய்தித் தொடர்பாளராகவும் நீடிப்பார் எனத் தெரிகிறது.

ஆப்கனின் அடுத்த அதிபராக முல்லா அப்துல் கனி பரதார் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த முல்லா பரதார்?

இவர் தலிபான் நிறுவனர்களில் ஒருவர். இப்போது அரசியல் தலைமயகப் பொறுப்பை நிர்வகிக்கிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தோஹாவில் நடைபெற்ற ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இவர் தலிபான் நிறுவனம் முல்லா முகமது ஒமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய கமாண்டர். 2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தானின் கராச்சியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018ல் அவர் விடுவிக்கப்பட்டார். ட்ரம்ப் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் விடுவிக்கப்பட்டார். அவரை அமெரிக்கா, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நம்பகத்தன்மை நிறைந்த முகமாகக் கருதியது.

முல்லா பரதார் அவருடைய பல்வேறு தாக்குதல்களால் அறியப்பட்டாலும் கூட 2004, 2009 எனத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லா பரதார் இன்று ஆப்கன் வந்தபோது தலிபான்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனால், மக்கள் இதை எப்படி வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை.

தலிபான்கள் அமைச்சரவையை இறுதி செய்துவந்தாலும் கூட நாட்டில் ஷாரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளதால் இதற்கு முன்னதாக 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நிலவிய கடுமையான சூழல் நீடிக்கலாம் என்ற அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x