Published : 26 Jun 2021 04:54 PM
Last Updated : 26 Jun 2021 04:54 PM

விலை குறைவான ஃபைஸரை விடுத்து கோவாக்சினை தேர்வு செய்தது ஏன்? சர்ச்சையில் சிக்கிய பிரேசில் அதிபர்

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டில் சர்ச்சையாகி இருக்கிறது. இது அந்நாட்டு அதிபர் ஜேர் போல்சொனோரோவுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து அந்நாட்டு
சுகாதார மையம் தரப்பில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கிறோம். முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஃபைஸர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கானோர் பிரேசிலில் கரோனாவால் உயிரிழந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் ஊழல் செய்துவிட்டதாகவும் அரசாங்கத்துக்கு கண்டனக் குரல் எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டாவும், லூயிஸ் மிராண்டாவும் தான் முதன்முதலில் சந்தேகம் எழுப்பினர்.

சுமார் 1.6 பில்லியன் ரெய்ஸ் ( பிரேசில் பணம்) அளவு செலவு செய்து பாரத் பயோடெக்கின் கோவாக்சினை கொள்முதல் செய்ய என்ன அவசியம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பிரேசில் நாடாளுமன்றத்தில் இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பிரேசில் அரசுக்கும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரேசிலின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் என்ற நிறுவனம் கோவாக்சின் ஒப்பந்தம் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரேசில் நாட்டுக்கு கோவாக்சின் விநியோகித்ததில் எவ்விதமான ஊழலும் நடக்கவில்லை. அத்தகைய புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். மேடிசன் பயோடெக் நிறுவனம் எங்களின் சர்வதேச வர்த்தகத்தைக் கவனிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜேர் பொல்சோனாரோ, கோவாக்சின் ஒப்பந்தத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

அதிக விலைக்கு அந்தத் தடுப்பூசியை கொள்முதல் செய்யவும். நான் ஊழல் கறைபடியாதவன். எனது அரசுக்குக் களங்கம் விளைவிக்கவே எதிர்க்கட்சிகள் இத்தகைய கட்டுக்கதைகளை முன்வைக்கின்றன என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x