Published : 18 Jun 2021 11:47 AM
Last Updated : 18 Jun 2021 11:47 AM
நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் நேற்று பள்ளி ஒன்றில் நுழைந்து ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அங்கிருந்த ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் நடத்தப்பட்ட மோதலில் போலீஸார் ஒருவர் பலியானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, பிப்ரவரி மாதம் நைஜீரியாவின் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100 மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் அரசுடனான பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தீவிரவாதிகள் மாணவிகளை விடுவித்தனர்.
நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் மற்றும் பள்ளி மாணவர்களைக் கடத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது. 2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது. போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT