Published : 19 May 2021 02:13 PM
Last Updated : 19 May 2021 02:13 PM

உண்மையின் பக்கம் நில்லுங்கள்: கேஜ்ரிவால் மீது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விமர்சனம்

உண்மையின் பக்கம் நில்லுங்கள் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், “சிங்கப்பூரிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட 3-வது அலை இந்தியாவில் உருவாகலாம். ஆதலால், மத்திய அரசுக்கு நான் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

முதலாவதாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலைக் கடுமையாக விமர்சித்துள்ளார் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

இதுகுறித்து விவியன் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல்வாதிகள் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். சிங்கப்பூரில் எந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸும் உருவாகவில்லை” என்றார்.

மேலும், இக்கருத்துடன் இந்தியாவில் உருவானதாகக் கூறப்படும் B.1.617 2 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ்தான் சிங்கப்பூரில் பரவுகிறது என்பதைக் குறிப்பிடும் வகையில், உலக அளவில் பிரபலமான நேச்சர் மருத்துவ இதழின் பதிவை அவர் பகிர்ந்திருந்தார்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் சுகாதாரத் துறையும் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருப்பது இந்தியாவில் உருவானதாகக் கூறப்படும் பி.1.617.2 வகை வைரஸ்தான்” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூர் சமூக வலைதளங்களில் பலரும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை விமர்சித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x