Published : 02 Mar 2021 03:51 PM
Last Updated : 02 Mar 2021 03:51 PM
வரும் ஜூலை மாத இறுதிக்குள் மக்கள்தொகையில் 40% பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவின் மூத்த சுகாதாரத்துறை ஆலோசகர் ஷாங் நன்ஷன் கூறும்போது, “கரோனா தடுப்பு மருந்துகளை சீனா ஏற்றுமதி செய்தாலும், ஜூலை மாத இறுதிக்குள் மக்கள்தொகையில் 40% பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரு டோஸ்களும் அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்துகளை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT