Published : 05 Feb 2021 03:15 AM
Last Updated : 05 Feb 2021 03:15 AM
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூகி கட்சியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சிப் பொறுப்பை ராணுவம் கைப்பற்றியது.
மேலும் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கிய தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூகி முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மியான்மரில் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி தொடரும் என்றும் பின்னர் தேர்தல் நடத்தி வெற்றியாளர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடத்திய சந்திப்பு சீனாவின் ஒத்துழைப்பின்மையால் தோல்வியில் முடிந்தது. எனவே, மியான்மர் மீது எந்த அறிக்கையும் கவுன்சில் வெளியிடவில்லை.
இதுகுறித்து ஐ.நா. தலைவர் அன்டோனியோ குத்தேரஸ் கூறுகையில் ‘‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் முடிவு எட்டப்படாதது துரதிருஷ்டவசமானது. ஆனாலும் மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை தோல்வியடையச் செய்யும் வகையில் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டப்பட்டு அழுத்தம் தரப்படும். அதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT