Published : 02 Jan 2021 05:56 PM
Last Updated : 02 Jan 2021 05:56 PM
புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “அமெரிக்காவில் கடந்த 10 நாட்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1 லட்சத்து 66,044 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 2 கோடியைக் கடந்துள்ளது. கலிப்போர்னியா. புளோரிடாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு மருந்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் கரோனா பாதிப்பு அமெரிக்காவில் அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
மேலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கத் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பு மருந்தைப் பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT