Published : 30 Dec 2020 03:09 PM
Last Updated : 30 Dec 2020 03:09 PM
ஜெர்மனியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1000க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத் துறை தரப்பில், “கரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்பக் காலத்துக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் அதிகபட்ச உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 1,129 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 32,107 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று மட்டும் ஜெர்மனியில் 22,459 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் ஜெர்மனியும் ஒன்று.
கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT