

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,214 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,214 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,62,668 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நாட்டில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கரோனா தொற்று தீவிரமாக உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.