Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ.11 லட்சத்தை வீணடித்துள்ளான். ஆனால் அந்தத் தொகையை திரும்பத் தர இயலாது எனஆப்பிள் நிறுவனம் கைவிரித்துவிட்டது.
நியூயார்க் நகரைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ஜான்சன் (41) என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து 16,000 டாலர் (சுமார் ரூ.11 லட்சம்) எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கருதி, வங்கியில் புகார் அளித்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அவ்வாறு மோசடி எதுவும் நடைபெறவில்லை எனத் தெரியவந்தது. மேலும் அவரது 6 வயது மகன் ஜார்ஜ், ஐபேடில் கேம் விளையாடி இத்தொகையை இழந்துள்ளது தெரியவந்தது.
சிறுவன் ஜார்ஜ் தனது தாயின் ஐபேடில் சோனிக் ஃபோர்சஸ் என்ற கேம் விளையாடியுள்ளான். அதில் வழங்கப்படும் ரெட் ரிங், கோல்டு ரிங் ஆகிய பூஸ்டர்களை பெறுவதற்கு படிப்படியாக ரூ.11 லட்சம் வரை செலவிட்டுள்ளான்.
இந்த கேம் ஆப்பிள் நிறுவனம் தொடர்புடையது என்பதால் அந்த நிறுவனத்தை ஜெஸ்ஸிகா தொடர்புகொண்டார். பணத்தை திரும்பத் தருமாறு கோரினார். ஆனால் 60 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் பணத்தை திருப்பித் தரமுடியாது என ஆப்பிள் நிறுவனம் கைவிரித்து விட்டது. மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க ஐபேடில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாகவும் அதை ஆக்டிவேட் செய்ய ஜெஸ்ஸிகா தவறிவிட்டதாகவும் கூறியுள்ளது.
இந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள ஜெஸ்ஸிகா, இது தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT