Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ராணாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு- சிகாகோ நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்.

மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீசாரால் உயிரோடு பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹாவூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009-ல்பிடிபட்டார். மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழில் அதிபர் ராணா சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. அமெரிக்காவில் நடந்த குற்றம் தொடர்பான வழக்கு அவர் மீது அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், சிறையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் ராணா மனு தாக்கல் செய்தார்.

சிகாகோவிலுள்ள பெடரல் நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஜாக்குலின் சூலிஜியான் அவரது மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x