Published : 07 Dec 2020 03:55 PM
Last Updated : 07 Dec 2020 03:55 PM

சீனாவில் இருந்து இந்தோனேசியாவுக்கு வந்திறங்கிய கரோனா தடுப்பு மருந்துகள்

முதல் முதலாக சீனாவிலிருந்து கரோனா தடுப்பு மருந்துகள் இந்தோனேசியாவுக்கு மில்லியன் கணக்கில் வந்திறங்கி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துகள் முதற்கட்ட மாக வந்திறங்கி உள்ளன. சுமார் 1.2 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கின. அடுத்தக் கட்ட கரோனா தடுப்பு மருந்துகள் ஜனவரி மாதம் வந்திறங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா அதிகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அறியப்படுகிறது. இந்தோனேசியாவில் இதுவரை 5,81,550 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளன. 17,000 பேர்வரை கொல்லப்பட்டனர்.

இந்தோனேசியாவின் 34 மாகாணங்களிலும் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளன.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 6 கோடி பேருக்கு அதிகமானவர்க்ள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x