Published : 02 Dec 2020 03:29 PM
Last Updated : 02 Dec 2020 03:29 PM
பைசர் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் கிடைத்திருப்பது அற்புதமான செய்தி என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பைசர்-பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை பிரிட்டன் அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டது. அடுத்த வாரம் முதல் பைசர் கரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, ''இது அற்புதமான செய்தி. கரோனா தடுப்பு மருத்தின் உற்பத்தி நமது வாழ்க்கையை இயல்பு நிலைக்குத் திருப்பும். நமது பொருளாதாரம் மீண்டும் நகரும்'' என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து அங்கு கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பிரிட்டனில் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையை நெருங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT