Published : 13 Nov 2020 05:14 PM
Last Updated : 13 Nov 2020 05:14 PM

அடுத்த சில வாரங்களில் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மக்களுக்கு ஜெர்மனி அரசு எச்சரிக்கை

ஜெர்மனியில் வரும் வாரங்களில் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி அரசின் நோய்த் தடுப்பு மையமான ராபர்ட் கோச் நிறுவனம் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,542 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,51,095 ஆக அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில் கரோனா இறப்பு 12,000-ஐக் கடந்துள்ளது. வரும் வாரங்களில் கரோனா பரவல் மோசமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று ஜெர்மனி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x