Published : 07 Oct 2015 02:29 PM
Last Updated : 07 Oct 2015 02:29 PM
ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டுஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல், தவறுதலாக நேர்ந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்கமாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரை தாலிபான்கள் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து அந்த நகரை மீட்க நேட்டோ படையினருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தீவிரமாக போரிட்டு வருகின்றனர். அப்போது கடந்த சனிக்கிழமை குண்டுஸ் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் 22 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையை சேர்ந்த விமானத்தால் நடத்தப்பட்டது. இதனை அமெரிக்கா செய்திருக்கும் குற்றச் செயல் என்று ஐ.நா. கடுமையாக கண்டித்தது.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அந்த மருத்துவமனையில் நோயாளிகளும் பணியாளர்களும் நிரம்பியிருந்தனர். தாக்குதலில் குறைந்தது 22 பேர் பலியானார்கள். மேலும் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT