பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த முடியாது: இம்ரான்கான்

பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த முடியாது: இம்ரான்கான்
Updated on
1 min read

பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த முடியாது என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 500க்கும் குறைவாகக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இவ்விரு மாகாணங்களில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பு பாகிஸ்தானுக்குப் பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in