

பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 2,638 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 2,638 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,59,169 ஆக அதிகரித்துள்ளது. 6,675 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 3,10,303 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து பிலிப்பைன்ஸுக்கு வழங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன.