

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்த நிலையில் இத்தடுப்பு மருந்தின் முதற்கட்டச் சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ’ஜான்சன் & ஜான்சன்’ நிறுவனம் தரப்பில், “Ad26.COV2.S என்று பெயரிடப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட சோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தியதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொட்ரந்து இரண்டாம் கட்ட சோதனை நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.