Published : 07 Oct 2020 02:43 PM
Last Updated : 07 Oct 2020 02:43 PM

ட்ரம்ப்புக்கு கரோனா இருந்தால் விவாதம் நடத்த வாய்ப்பில்லை: ஜோ பிடன்

ட்ரம்ப்புக்கு ஒருவேளை கரோனா தொற்று இருந்தால் அவருடன் விவாதம் நடைபெறாது என்று தான் நினைப்பதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களுடன் ஜோ பிடன் பேசும்போது, “ட்ரம்ப்பின் தற்போதைய உடல்நலம் குறித்த தகவல் என்னிடம் இல்லை. ட்ரம்ப்புக்கு கரோனா தொற்று இருந்தால் இரண்டாவது விவாதம் நடைபெறாது என்று நினைக்கிறேன். பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. நான் தொடர்ந்து மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி நடந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால், ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர் ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 3 இரவுகள் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். எனினும், ட்ரம்ப் கரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டாரா என்ற தகவல் வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில், தான் நலமாக இருப்பதாகவும், விவாதத்துக்குத் தயார் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x