Published : 06 Oct 2020 08:24 PM
Last Updated : 06 Oct 2020 08:24 PM

அலெக்ஸிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக முழு விசாரணை வேண்டும்: ஜெர்மனி வலியுறுத்தல்

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக முழு விசாரணை நடத்துமாறு ஜெர்மனி உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து ஜெர்மனி அரசுத் தரப்பில், “ரஷ்ய மண்ணில் அந்நாட்டைச் சேர்ந்த குடிமகனுக்கு எவ்வாறு இது நடத்தப்பட்டது என்பதை ரஷ்யா விளக்க வேண்டும். இது தொடர்பாக முழு விசாரணையை ரஷ்யா நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளன.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x