ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் சுகாதாரத் துறை தரப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாக கடைப்பிடிக்காததன் காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 94,190 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 419 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலக நாடுகளின் செயல்பாட்டைக் கடுமையாக முடக்கியுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி மருந்து கண்டறியும் சோதனையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் சீனாவின் மருந்து நிறுவனமான சினோபார்முடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் கரோனாவுக்கு மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

மூன்றாம் கட்டச் சோதனைகள் முடிந்த ஆறு வாரம் கழித்து தடுப்பூசிக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என்று ஐக்கிய அமீரக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பூசிகள் முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in