Published : 23 Sep 2020 04:53 PM
Last Updated : 23 Sep 2020 04:53 PM
இஸ்ரேலில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இஸ்ரேலில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இஸ்ரேலில் கரோனாவுக்கு 1,316 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இரண்டாம் கட்டக் கரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அக்டோபர் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT