Published : 02 Sep 2020 09:10 PM
Last Updated : 02 Sep 2020 09:10 PM
ஈரானில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஐ நெருங்கிறது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 125 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 21,797 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,78,752 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,26,801 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானின் பொருளாதாரம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT