

ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளார். ரஷ்ய அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய நபருக்கு எதிராக செய்யப்பட்ட இந்த குற்றச் செயல் குறித்து பிரான்ஸ் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்து கொள்கிறது. அலெக்ஸி நாவல்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் அலெக்ஸி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸ் நாவல்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்ஸி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.