

நியூசிலாந்து கரோனா பரவல் தீவிரமாக உள்ள ஆக்லாந்தில் ஊரடங்கை அந்நாட்டு அரசு நீடித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, “ நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய மாகாணமான ஆக்லாந்தில் கரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் 4 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த நான்கு நாட்களில் ஆக்லாந்தில் கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எங்களுக்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
தென் பசிபிக் கடலில் 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் வாழ்த்துத் தெரிவித்தது.
கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் 1,683 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,538 பேர் குணமடைந்துள்ளனர்.