Published : 24 Aug 2020 02:42 PM
Last Updated : 24 Aug 2020 02:42 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பைத் தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை ஆலோசகர் ஷாஜாத் அக்பர் கூறுகையில், “நவாஷ் ஷெரீப்பைத் தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான் அரசு கருதுகிறது. ஏற்கெனவே அவரை ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கோரிக்கை அனுப்பியுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜாமீன் விதிமுறைகளை மீறியதன் காரணமாக நவாஸ் ஷெரீப் தற்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதைத் தொடர்ந்து உடனடியாக ஷெரீப், லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பிய பின், லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
லண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாயின.
உடல்நலக் குறைவு காரணமாக சுமார் 8 வாரங்களுக்கு நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஜாமீன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் நவாஷ் ஷெரீப் சரணடையாமல் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT