Published : 24 Aug 2020 11:55 AM
Last Updated : 24 Aug 2020 11:55 AM

பாகிஸ்தானில் கரோனா இறப்பு குறைந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா தொற்று மற்றும் இறப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 4 பேர் மட்டுமே கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானின் நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 591 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை 2,75,836 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6,275 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 1000 பேருக்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு உண்மையில் குறைந்துவிட்டதா? அல்லது மருத்துவப் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக தொற்று குறைவாகக் காணப்படுகின்றதா என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

முன்னதாக, பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது தொற்று குறைந்துள்ளது.

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள பஞ்சாப், சிந்து மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x