Published : 28 Sep 2015 12:24 PM
Last Updated : 28 Sep 2015 12:24 PM
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் ஒபாமா தவறிவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க செய்திச் சேனலான சி.பி.எஸுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், சிரிய அதிபர் பஷர் அல் ஆசாதுக்கு ஆதரவாகவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயல்பாடுகளை தாக்கியும் பேசினார்.
சுமார் 5,000 சிரிய போராளிகளுக்கு அமெரிக்க ராணுவம் பயிற்சி அளித்ததன் மூலம் சொற்ப எண்ணிகையிலான வீரர்களே தயாரானதாக பெண்டகன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டிய அவர், "சர்வதேச சட்ட விதிகளையும் ஐ.நா. எதிர்ப்பையும் மீறி ராணுவ உதவியை அமெரிக்கா அளித்து வருகிறது. இதன் மூலம் கொடூரமான ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்கும் பொறுப்பை நிறைவேற்ற அமெரிக்கா தவறிவிட்டது.
நாங்கள் முறையான ஆட்சியை நடத்திவரும் ஆசாதுக்கே ஆதரவாக இருக்கிறோம். அந்த அரசை கவிழ்க்க நீண்ட காலமாக அமெரிக்க அரசு மேற்கொண்டு வரும் திட்டம் நிறைவேறாது. அதன் விளைவுகளை தற்போது நாம் பல நாடுகளில் பார்த்து வருகிறோம்.
சிரிய மக்கள் தங்களது அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் ஒபாமாவின் தலையீடு அவசியமற்றது. சிரிய அதிபர் தமது மக்களுக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளகூடியது அல்ல" என்றார் புடின்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்ளும் ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று சந்திக்க உள்ள நிலையில், இவ்வாறாக குறை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, சிரியாவின் நிலைமைக்கு பொறுப்பேற்று ஆசாத் பதவி விலகத் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் விருப்பத்துக்காகவும், ஐ.நா. கவுன்சில் ஆசைப்படுகிறது என்பதற்காகவும் நான் பதவி விலக மாட்டேன் என்று சிரிய அதிபர் பஷார்-அல்-ஆசாத் சூசகமான கருத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT